ஆரி பேசும் போது கமல்ஹாசன் குறுக்கிட்டதைப் பார்த்து மகிழ்ச்சியடைந்துள்ளார் ரம்யா பாண்டியன்.

அக்டோபர் 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் 4-வது சீசனில் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் கடந்த வாரம் அனிதா சம்பத் வெளியேற்றப்பட்ட நிலையில் இதுவரை மொத்தம் 10 போட்டியாளர்கள் வெளியேற்றப்பட்டு 8 பேர் களத்தில் உள்ளனர். இந்த வார நாமினேஷனில் கேபி, ஷிவானி, ரம்யா, சோம், ஆஜித் ஆகிய 5 போட்டியாளர்கள் இருந்த நிலையில் இந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்தனர்.
இந்நிலையில் 90 நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்த ஆஜித் இந்த வாரம் குறைந்த வாக்குகளைப் பெற்று 11-வது போட்டியாளராக வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த வாரம் முழுக்க ஆரி - பாலாஜி இடையேயான மோதல் உச்சகட்டத்தை எட்டியதை அடுத்து வார நேற்று போட்டியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன் பாலாஜியின் தவறுகளை சுட்டிக்காட்டினார். அதேவேளையில் சக போட்டியாளர்கள் வைக்கும் சிறு சிறு விஷயங்களை திருத்திக் கொள்ளலாமே என்றும் ஆரிக்கு அட்வைஸ் வழங்கினார்.
இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சிக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் ப்ரமோவில், கன்பெஷன் அறையிலிருந்து கமல்ஹாசனிடம் பேசும் பாலாஜி, “கோபம் என்பது எனது குணம். ஏனென்றால் கோபத்தை மட்டுமே பார்த்து வளர்ந்திருக்கிறேன். என் வாழ்க்கையில் தவறுகளைச் சுட்டிக் காட்ட யாருமே இல்லை. மக்களும் அவர்களின் பிரதிநிதியாகிய கமல்ஹாசனும் சொல்லும் போது எனது தவறுகளை சரி செய்து கொள்ள வேண்டும் என்பது மட்டும் எனக்குத் தெரியும். எவ்வளவு கீழே விழுந்தாலும் திரும்ப வருவேன்” என்று கூறியிருந்தார்.
இரண்டாவது ப்ரமோவில் ஒரு அட்டையில் போட்டியாளர்களின் பெயரும், புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. யாருக்கு எந்த போட்டியாளரின் அட்டை வருகிறதோ அவர்களைப் பற்றி பேச வேண்டும். அதில் ஆரியிடம் ரம்யா பாண்டியன் சிக்க, அவர் பயன்படுத்திய உத்தி பற்றி பேச ஆரம்பிக்கிறார். அப்போது கால் சென்டர் டாஸ்க் வரை சென்ற ஆரியை குறுக்கிடும் கமல் நீங்கள் பேச வேண்டிய விஷயத்தை தாண்டிச் சென்று விட்டதாகக் கூறுகிறார். இதைக்கேட்டு ரம்யா சந்தோஷமடைகிறார். அடுத்ததாக பாலாஜி தனக்கு ஆரியின் புகைப்படம் உள்ள கார்ட் வந்திருப்பதாக கமல்ஹாசனிடம் கூற அதைக்கேட்டு அனைவரும் சிரிக்கின்றனர். எனவே இன்றைய எபிசோடிலும் சுவாரஸ்யம் இருக்கும் எனத் தெரிகிறது.
உடனடி செய்திகளை தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்